உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்! - அமெரிக்காவுக்கு இலங்கை எச்சரிக்கை
கொழும்பு: தமது உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது இலங்கை அரசு.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் சட்ட திருத்தங்கள் குறித்து தேவையற்றதும் பொறுப்பற்றதுமான கருத்துக்களை அமெரிக்கா தெரிவித்து வருவதாகவும் தனது எச்சரிக்கை குறிப்பில் இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபருக்கு புதிய அதிகாரங்கள் பலவற்றை வழங்கி இலங்கை அரசியல் சட்டத்தை திருத்தியமைத்து கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டது அமெரிக்கா.
ராஜபக்சே அரசின் இந்த திருத்தம் ஜனநாயகத்தை அலட்சியப்படுத்தியுள்ளது என்றும்
நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றம், உயர் நீதிமன்றம் ஒன்றுக்கு ஒன்று சம அதிகாரங்களை கொண்டிருக்கும் முறைமையை இந்த திருத்தம் பலவீனப்படுத்துகிறது என்றும் அதில் அமெரிக்கா கூறியிருந்தது.
கண்டனம்....
இந்த அறிக்கை குறித்து இலங்கை ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல கருத்து கூறுகையில், "அமெரிக்காவின் இந்த கருத்து எதுவும் ஏற்க முடியாதது. அமெரிக்கா அதன் சொந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகாணப் பார்க்கட்டும்.
இத்தகைய தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் அமெரிக்கா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவது மட்டுமன்றி நாட்டின் அதி உயர் அதிகார பீடமான உயர் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது .
இலங்கையைப் பற்றி அறிக்கை விடுவதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் சாசனத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று அமெரிக்காவை கேட்டுக் கொள்கிறோம்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் எமது நாட்டின் அரசியல் சாசன கட்டமைப்புக்குள்ளேயே செய்யப்பட்டது என்ற நிலையில், இதில் அமெரி்க்கா கருத்து சொல்ல இடமேது?
அமெரிக்காவின் இந்த அறிக்கையை அரசாங்கம் கண்டிக்கிறது.
நாங்கள் செய்தமை சட்ட ரீதியானதே. ஆதலால் யாருக்கும் இது குறித்து கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது", என்றார்.












Click it and Unblock the Notifications