ஏடிஎம்மில் கொள்ளையடித்த 4 பேர் கைது-ரூ 21 லட்சம் மீட்பு
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.21 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
துரைப்பாக்கத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் சில தினங்களுக்கு முன் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தைத் திறந்து ரூ.21 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ஏடிஎம் மையத்துக்கு பணம் கொண்டு வரும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஹாஜி முகமது என்கிற அஷ்ரப் தான் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அஷ்ரப் தனது கூட்டாளிகளான புதுவையைச் சேர்ந்த ராஜேஷ், அய்யப்பன் என்கிற கார்த்திக் மற்றும் லாரி டிரைவர் பாபு ஆகியோரை அழைத்துக் கொண்டு ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளார். அங்கு முதலில் ராஜேஷ் 'மங்கி கேப்' அணிந்து கொண்டு உள்ளே சென்று கண்காணிப்பு கேமிரா மீது ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.
உள்ளே வாட்ச்மேன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், ஏடிஎம் அறையின் கதவை மூடிக் கொண்டு அஷ்ரப் ரகசிய எண் மூலம் நான்கே நிமிடங்களில் ரூ.21 லட்சம் பணத்தை எடுத்து விட்டார். பின்னர் அவர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
உத்திரமேரூர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பணத்தை பதுக்கி வைத்தனர். தனிப்படை போலீசார் இந்த நால்வரையும் கைது செய்து பணத்தை மீட்டுள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் சிறுசேரி பகுதியில் இவர்கள் இதேபோல ரூ.5 லட்சம் பணத்தை ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது.
ஏடிஎம் மையங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இது தொடர்பாக வங்கி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரி்க்குமாறு வலியுறுத்துவோம் என்றார்.