பெங்களூர் குண்டுவெடிப்பு: மதானியின் சிறைக் காவல் செப். 28 வரை நீட்டிப்பு
பெங்களூர்: பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் சிறைக் காவல் செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிற குற்றவாகளின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று அவர்கள் முதலாவது கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் ஹூலகி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதானி மட்டும் ஆஜர்படுத்தப்படவில்லை. அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார் மாஜிஸ்திரேட்.
பின்னர் மதானி மற்றும் மற்ற 14 பேரின் சிறைக் காவலை செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும், மதானிக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்குமாறும் விசாரணை அதிகாரி ஓம்காரய்யாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் மதானி உள்பட 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.