ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம்-வென்றார் அர்ஜூன் முண்டா
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நேற்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்தார் முதல்வர் அர்ஜூன்
முண்டா.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது பாஜக. முதல்வராக அர்ஜூன் முண்டா பதவியேற்றுள்ளார்.
நேற்று அவர் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 45 வாக்குகளும், எதிராக 30 வாக்குகளும் கிடைத்தன. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, நியமன உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து 81 ஆகும். ஹாதியா தொகுதி எம்.எல்.ஏ கோபால் சரண் நாத் சஹதியோ காலமானதால் அத்தொகுதி காலியாக உள்ளது.
முன்னதாக அமைச்சர் ஹேமந்த் சோரன், ஒரு வரியில் அமைந்திருந்த நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். இவர் சிபு சோரனின் மகன் ஆவார். இவர் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.