செல்வ வரி வழக்கை தள்ளுபடி செய்ய கோரும் ஜெயலலிதா
ஜெயலிதா 1992-993ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
செல்வ வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவானது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் 2வது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் ஜெயலலிதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
செல்வ வரி சட்டத்தை நான் எந்த விதத்திலும் மீறவில்லை. என் மீது புகார் கூற செல்வ வரி துறை உதவி ஆணையாளருக்கு அதிகாரம் கிடையாது. அதேபோல என் மீது வழக்குப் பதிவு செய்ய செல்வவரித் துறை கமிஷனர் உத்தரவிட முடியாது. பொது இயக்குனருக்கு மட்டும் அந்த அதிகாரம் உண்டு.
இந்த புகார் தொடர்பாக நான் விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படவில்லை.
எனவே எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து செல்வ வரித்துறையின் வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சிவக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.