பி.எப் வட்டி 1 சதவிகிதம் அதிகரித்து 9.5 சதவிகிதமாகியது: கார்கே அறிவிப்பு
டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 9.5 சதவிகிதம் ஆகியுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 4.4 கோடி ஊழியர்கள் இந்த நிதயாண்டு முதல் தொழிலாளர் வைப்பு நிதிக்கு பெற்று வந்த 8.5 சதவிகித வட்டிக்குப் பதிலாக 9.5 சதவிகிதம் பெறவிருக்கின்றனர்.
நேற்று நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு கூடுதலாக ரூ. 1,700 கோடி செலவாகும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இந்த முடிவு நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இத்தனை ஆண்டுகளும் உலகப் பொருளாதாரம் சரிந்தபோதிலும் தொழிலாளர்களுக்கு 8.5 சதவிகித வட்டி கொடுக்கப்பட்டது.
தற்போது எடுத்துள்ள முடிவை தொழிலாளர் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தொழிலாளர் வைப்பு நிதியின் ஒரு பாகத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நிதித்துறை அமைச்சகத்தின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படியே தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.