இலங்கை: மட்டக்களப்பில் டைனமைட்டுகள் வெடித்து 2 சீனர்கள் உள்பட 60 பேர் பலி

சாலை அமைக்கும் பணிக்காக 3 கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதி காவல் நிலையத்தின் அருகே இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் ஒரு கண்டெய்னரில் இருந்த டைனமைட்டுகள் திடீரென வெடித்துச் சிதறியதாகவும்,
இதைத் தொடர்ந்து மற்ற இரு கண்டெய்னர்களில் இருந்த டைனமைட்டுகளும் வெடித்து சிதறியதில் போலீசார், இரு சீனர்கள் உள்பட 60 பேர் பலியாகிவிட்டதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலா கூறியுள்ளார்.
இந்த டைனமைட்டுகள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனா பல ரகசிய ராணுவ தளங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தப் பகுதிகளில் சீனர்களின் நடமாட்டம் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவர்கள் சாலை, பாலங்கள், அணைகள் கட்டவே வந்துள்ளதாக இலங்கை கூறுகிறது.
இந் நிலையில் இந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன அரசுக்குச் சொந்தமான சைனா ஓவர்சீஸ் ஹோட்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்காக கொண்டு வரப்பட்ட டைனமைட்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும் இலங்கை கூறியுள்ளது.
இது ஒரு விபத்து தான் என்றும், இதில் சதி ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் கரடியனாறு காவல் நிலையம் தரைமட்டமாகிவிட்டது. அதிலிருந்த பெரும்பாலான போலீசார் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் பலியானோர் எண்ணிக்கையும் 70 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவம் நடந்த இடம் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தையடுத்து கரடியனாறு பகுதிக்கு கொழும்பில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications