மணல் குவாரி வழக்கில் தூத்துக்குடி கலெக்டர் உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜராக உத்தரவு
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரி நடத்த தடை கோரிய வழக்கில் தூத்துக்குடி கலெக்டரை நேரில் ஆஜராகுமாறு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாடசாமி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரி நடத்த தூத்துக்குடி கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல் குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் எடுத்துச் செல்வதற்காக ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளனர்.
பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி 10 முதல் 15 அடி ஆழத்திற்கு மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும், ஆற்றில் நீர் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படும், விவசாயம் பாதிக்கப்படும். எனவே, மணல் குவாரிக்கு கலெக்டர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அசோக் ஆஜரானார். தூத்துக்குடி கலெக்டர், கனிம வளத்துறை கூடுதல் இயக்குனர், பொதுப்பணி துறை தாமிரபரணி வடிநில கோட்ட நிர்வாக பொறியாளர் ஆகியோர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications