தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் கடந்த முறையை விட இந்த முறை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சல் அதிகமாக உள்ளது. இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அரசு சுதாரித்துக் கொண்டு நோய்ப் பரவலைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் நல்லிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பருத்தி வியாபாரி பொன்னுசாமி (48). இவர் கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 12 மணிக்கு இறந்தார்.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. நல்லிச்செட்டிப்பாளையத்தில் சுகாதார துறையினர் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் இவருடன் சேர்த்து பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 6 பேர் பலியாகினர்.
இதேபோல, சென்னை அண்ணாநகரில் அனுமதிக்கப்பட்டிருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த பிரதீபா, நெய்வேலியில் சொக்கலிங்கம் ஆகியோரும் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
700 பேர் பாதிப்பு:
இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில்700 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒன்பது மாதங்களில் 4,308 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இப்போது 700 பேர் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி, தனிப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை, கோவை, கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தொடரும் நிலையில், தாமதிக்காமல் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
மேலும் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனை வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மையங்களிலும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை வசதி உள்ளது.
பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து (மூக்கில் விடும் மருந்து) வழங்குதல் மற்றும் தடுப்பூசி போடும் திட்டம் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பு மருந்துக்கு ரூ.150-ம், தடுப்பூசிக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications