திமுகவுடன் கூட்டணிக்கு நாங்கள் தயாரில்லை-பாஜக
கரூர்: அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கரூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. தமிழகம் முழுக்க டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி பலர் இறந்துள்ளனர். இதற்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை என்பதை சுகாதார அமைச்சர் பன்னீர் செல்வமே ஒப்புக்கொண்டுள்ளார். இது போன்ற அவல நிலை தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதில்லை.
இலவச டிவி, அடுப்பு வழங்க முடிகிறது. ஆனால், மருந்து மட்டும் இலவசமாக அளிக்க முடியவில்லை. மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் தடுப்பு மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும்.
நவம்பர், டிசம்பர், ஜனவரியில் மாநிலம் முழுவதும் சமநீதி கோரி, தாமரை யாத்திரை நடத்தப்படும். ஜனவரி 29 ம் தேதி சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
நூல் விலையேற்றம் காரணமாக கரூரின் முக்கிய தொழிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு ஏற்றுமதியை உடனே நிறுத்த வேண்டும். அல்லது சலுகை விலையில் நூல் வழங்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கரூரில் அரசு கஞ்சி தொட்டி திறக்க வேண்டியிருக்கும்.
காஷ்மீர் பிரச்னைக்கு காங்கிரஸால் தீர்வு காண முடியவில்லை. தற்போது அனைத்து கட்சியையும் அழைத்துள்ளது. ஆளும் தகுதியற்றவர்களே மத்திய, மாநிலத்தில் ஆட்சியில் உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். பாரதிய ஜனதா சொந்த பலத்தில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பும் அளவு சக்தி படைத்துள்ளது. வரும் தேர்தலில் கூட்டணி குறித்து தி.மு.க. பேச முன்வந்தாலும், அதற்கு பாரதிய ஜனதா தயாரில்லை என்றார்.