'சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிட்டேன்!'
நெல்லை: பட்டமளிப்பு விழாவில் நடந்தது என்ன என்பது குறித்து சொல்ல வேண்டியவர்களுக்கு முறைப்படி சொல்லி விட்டேன் என்று நெல்லை அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் காளியப்பன் தெரிவித்தார்.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது துணைவேந்தர் காளியப்பன் அறைக்குள் புகுந்து திமுக எம்.எல்.ஏ மாலைராஜா தாக்கியதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் இதுவரை திமுக எம்.எல்.ஏ மீது ஒரு தூசி, துரும்பு கூட படவில்லை, அவர் மீது எந்து வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், அதிரடியாக சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் காளியப்பன். இந்தச் சூழ்நிலையில் நேற்று அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையொட்டி செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், துணைவேந்தர் பதவி என்பது உயரிய பதவியாகும். அதற்குரிய கண்ணியத்தை கடைசி வரை காத்துள்ளேன். என் பதவியின் கடைசி காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மக்களுக்கு தெரியும்.
பதவி நீட்டிப்பில் எனக்கு விருப்பம் இல்லை. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. இப்போதைக்கு பேராசிரியர் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன். மீதமுள்ள 8 ஆண்டுகளை ஆசிரியர் பணியிலே கழிக்க விரும்புகிறேன். என் பெயரில் வெளிவரும் சில யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது என்றார்.