தலைநகர் டெல்லியில் கன மழை: நகரமே வெள்ளக்காடானது
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை கொட்டித் தீர்த்த கன மழையால் நகரமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானம் மேக மூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று காலை முதல் இன்று காலை 8.30 மணி வரை 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. தெருக்கள் குளங்கள் போல் இருப்பதால் சிறிய கார்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றன.
நகரின் குறைந்த பட்ச வெப்ப நிலை 23.1 டிகிரி செல்சியஸ், அதிக பட்சம் 31 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் ஈரப்பதம் அதிக பட்சமாக 96 சதவிகிதமும், குறைந்த பட்சம் 66 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டிகளுக்காக டெல்லி தயாராகி வரும் நிலையில், ஸ்டேடியங்கள் கட்டுவதில் தாமதம், ஏகப்பட்ட ஊழல்கள் உள்ளிட்ட குளறுபடிகள் தலை விரித்தாடி வரும் நிலையில், தொடர் மழையால் டெல்லி மேலும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.