அணு விஞ்ஞானி கானை அமெரிக்காவிடம் ஒப்படைக்க விரும்பிய முஷாரப்: முன்னாள் பிரதமர் புகார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பிரபல பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பேராவலாய் இருந்தார் என்று முன்னாள் பிரதமர் ஜபருல்லா கான் ஜமாலி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின்போது ஜமாலி இந்த குற்றச்சாட்டை பற்றி கூறினார். அப்போது அவருடன் விஞ்ஞானி அப்துல் காதிர் கானும் உடன் இருந்தார்.
இது குறித்து ஜமாலி கூறியதாவது,
நான் பிரதமராக இருக்கையில் அதிபர் முஷாரப் என்னை அழைத்து விஞ்ஞானி கானை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடலாம் என்றார். இதையடுத்து நான் மந்திரி சபையைக் கூட்டி அதிபரின் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அதிபரிடம் அவர் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினேன். பாகிஸ்தான் அரசு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க சம்மதிக்காது என்றும் கூறினேன் என்றார்.
விஞ்ஞானி கான் கூறுகையில், ஜமாலி கூறியவை உண்மை. ஜமாலி மென்மையான மனம் படைத்தவர். உண்மைக்குப் புறம்பாக நடப்பவரில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications