மழைக் காலம் முடிந்ததும் நக்சல் நடவடிக்கை அதிகரிக்கும்: பாதுகாப்பு படை அச்சம்
டெல்லி: மழைக்காலம் முடிந்தவுடன் நக்சலைட்டுகளின் நடவடிக்கை அதிகரித்து விடும் என்று பாதுகாப்புப் படையினர் அஞ்சுகின்றனர். அடர்த்தியான காடுகளில் இருக்கும் அவர்களின் நடவடிக்கைகளை மழை முடக்கி வைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது,
சட்டிஸ்கர், ஜார்க்கன்ட், மேற்கு வங்காளம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் மழையால் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளுக்கு ஒத்தையடிப் பாதை தான் உள்ளது. அவை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் தேடுதல் வேட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நக்சலைட்டுகளின் நடமாட்டமும் குறைந்துள்ளது.
தற்போது மழைக் காலம் முடியவிருப்பதால், தண்ணீர் தேங்கிய இடங்கள் காய்ந்து போக்குவரத்து தொடங்க சுலபமாகி விடும். எனவே மழைக்காலம் முடிந்ததும் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
முன்பை விட நக்சலைட்டுகள் தற்போது சுறுசுறப்பாக உள்ளனர் என்று அவர்கள் கூறினார்கள்.