செங்கோட்டை-புனலூர் ரயிலுக்கு மக்கள் பிரியாவிடை: அதிகாரிக்காக இன்று ஒருநாள் இலவச ரயில் இயக்கம்
யுனெஸ்கோவின் கலாச்சார பண்பாட்டு சின்னத்தி்ல் இடம் பெறும் அளவுக்கு தகுதிவாய்ந்த செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை கடந்த 1904-ம் ஆண்டு செயல்படத் தொடங்கி 106 ஆண்டுகளை கடந்து நேற்றுடன் பிரியா விடை பெற்றது.
இந்த ரயில் நேற்றுடன் கடைசி பயணத்தை முடிப்பதாக தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்ததை தொடர்ந்து இருமாநில எல்லைப் பகுதி மக்கள் இந்த ரயிலை தங்கள் குடும்பத்தின் ஒருவராக கருதி வாழைமரம், சவுக்கு, பூத் தோரணம் ஆகியவற்றால் அலங்கரித்து ஆடிப் பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பல்லாயிரக்கணக்கானோர் ரயில் மேற்கூரையில் திரளாக நின்று சோகத்துடன் பிரியா விடை கொடுத்து இரவு 6 மணிக்கு புனலூரில் இருந்து கடைசி ரயிலை அனுப்பி வைத்தனர்.
பல்வேறு ரயில் நிலையங்களில் கிராம பொதுமக்கள் திரண்டு நின்று நள்ளிரவு 11 மணி வரை இந்த ரயிலுக்கு பிரியா விடை கொடுத்தனர். ரயில் நிலையங்களில் பணிபுரிந்த அனைவரும் நேற்று கனத்த இதயத்துடன் பணிமுடிந்து வீடுகளுக்குச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை கோட்ட கட்டிட பிரிவு மேலாளர் அலுவலகத்தில் இருந்து அவசர சுற்றிரிக்கை ஒன்று விடப்பட்டது. அந்த சுற்றிக்கையில் நேற்றுடன் பிரியா விடை பெற்ற மீட்டர் கேஜ் ரயில் இன்று ஒருநாள் மட்டும் இயக்கப்படும் என்றும், அதில் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 6 மணிக்கு பலர் இந்த ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்று டிக்கெட் கேட்டனர். ஆனால் டிக்கெட் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்தனர்.













Click it and Unblock the Notifications