இலங்கையில் 200 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு தீவிர பயிற்சி?
கொழும்பு: இந்தியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 200 பேருக்கு இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் தனது பயிற்சித் தளங்களை அமைத்து செயல்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பாவுக்கு தற்போது புதிய வாசஸ்தலமாக இலங்கை மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.
ஆனால் தற்போது 200 தீவிரவாதிகள் இலங்கையில் தீவிர ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. இந்தியாவுக்குள் ஊடுறுவ, இலங்கை நல்ல வாய்ப்பாகவும், எளிய வழியாகவும் இருப்பதாக தீவிரவாதிகள் கருதுவதால் இலங்கையை தங்களது புதிய களமாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புனேவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கிய இருவர், தாங்கள் கொழும்பில் வைத்து பயிற்சி பெற்றதாக கூறியிருந்தனர். இதை கோத்தபயா மறுத்திருந்தார். ஆனால் தற்போது 200 பேர் வரை பயிற்சி பெறுவதாக வெளியாகியுள்ள செய்தி இந்தியத் தரப்பில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.