பெண் குழந்தையை வளர்க்க ரூ. 3 லட்சம் வரதட்சணை கேட்ட கணவர் கைது
ராயபுரம்: பெண் குழந்தை பிறந்ததால் ரூ. 3 லட்சம் வரதட்சணை வாங்கி வர வற்புறுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் உதய பிரகாஷ் (25). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண்ணை மணந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த உதய பிரகாஷ் ஏமாற்றம் அடைந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அந்த குழந்தை நம் வீட்டில் இருக்கக் கூடாது. அதை உன் பெற்றோரிடம் கொடுத்து விடு, அல்லது அரசுத் தொட்டிலில் போடு என்று அவர் தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு வீர லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண் குழந்தையை வளர்க்க நிறைய செலவு ஆகும் என்று கூறி வீர லட்சுமியின் பெற்றோரிடம் இருந்து ரூ. 3 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார்.
இந்த தகராறுக்குப் பின் வீர லட்சுமி 6 மாத காலம் தாய் வீட்டிலேயே இருந்தார். கணவனுடன் வாழ விரும்பிய அவர் மீண்டும் உதய பிரகாஷைத் தேடி வந்துள்ளார். அதற்கு உதய பிரகாஷ் பணம் கொண்டு வந்தால் தான் வீட்டிற்கு வர முடியும் என்று மனைவியை விரட்டிவிட்டார்.
இதையடுத்து வீரலட்சுமி வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கீதா வீரலட்சுமியின் கணவரை கைது செய்தார். உதய பிரகாஷின் தந்தை சங்கரன், தாய் சந்திரா ஆகியோரைத் தேடி வருகிறார்.
பெற்ற பிள்ளையை வளர்க்க வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிய ஒரே ஆண் மகன் இவராகத்தான் இருக்க முடியும். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க சென்னை காவல் நிலையங்களில் கவுன்சிலிங்குக்கும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒருபோதும் குறைவில்லை - மனதளவில் மாற்றங்கள் ஏற்படாத வரை.












Click it and Unblock the Notifications