மதுரையில் பரபரப்பு-குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 2.5 லட்சம் ஆணுறைகள்
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குப்பைத் தொட்டியில் 2.5 லட்சம் ஆணுறைகள் வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆணுறைகள் அனைத்தும் பல்வேறு சர்வதேச அமைப்புகள், தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்திற்கு கொடுத்தவை என்று கூறப்படுகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துவதற்காக இவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் அலங்காநல்லூரில் உள்ள ஒரு கண்மாயை ஒட்டியுள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்குப் புகார்கள் போனது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை மீட்டனர். சில ஆணுறைகள் அடங்கிய பெட்டிகள் தீவைத்து கொளுத்தப்பட்டிருந்தன. இந்த ஆணுறைகளின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
இவை கடந்த 2009ம் ஆண்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்திற்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு இந்த ஆணுறைகள் வரவே இல்லை என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
எனவே உண்மை நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.