குலாம் நபி தலைமையில் ஆலோசனை-பாதியில் வெளியேறிய இளங்கோவன்
சென்னை: திருச்சியில் சோனியா காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது பாதியிலேயே வெளியேறினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அடுத்த மாதம் 9ந் தேதி திருச்சி வருகிறார். அவரது முன்னிலையில் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸில் இணைகிறார். இவர் காங்கிரஸில் இணைந்து பல மாதங்களாகி விட்டது. ஒப்புக்காக இந்தக் கூட்டத்தில் இணைகிறார்.
அப்போது நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி சிறப்புரையாற்றவுள்ளார். ஜெயலலிதா, கருணாநிதியைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெறுகிறது இந்த காங்கிரஸ் கூட்டம்.
இந்தக் கூட்டத்தை பிரமாண்டமானதாக மாற்ற காங்கிரஸார் களம் இறங்கியுள்ளனர்.
மேலும், மத்திய அரசின் சாதனைகளை விளக்கி தமிழ்நாடு முழுவதும் இளைஞர் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகிறார்கள். சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் இருந்தும் அக்டோபர் 2ம் தேதி பாத யாத்திரை தொடங்குகிறது. அனைத்து மாவட்டங்கள் வழியாக செல்லும் இவர்கள் நவம்பர் 19ம் தேதி திருச்சி சென்றடைகிறார்கள்.
அன்று திருச்சியில் பாதயாத்திரை குழுவினருக்கு பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.
ஒரு மாத இடைவெளியில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வருவதால் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமைச்சரும் குலாம்நபி ஆசாத் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
இக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி எம்.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, முன்னாள் எம்.பி.அன்பரசு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கார்த்தி ப.சிதம்பரம், சிரஞ்சீவி, சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உட்பட 200 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தின்போது இளங்கோவன் பாதியிலேயே வெளியேறினார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திருச்சியில் நடைபெற்ற அதிமுக, திமுக கூட்டங்களை விட பிரம்மாண்டமாக காங்கிரஸ் கூட்டம் அமைய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக கூறி விட்டுச் சென்றார்.