தர்மபுரி பஸ் எரிப்பு-3 கொலையாளிகளுக்கும் கருணை காட்ட கோரி அதிமுக மனு!
இதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழு வேலூர் சிறைக்குச் சென்று 3 பேரிடமும் கையெழுத்து வாங்கினர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 அதிமுகவினவருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை அக்டோபர் 8ம் தேதி தூக்கிலிட சேலம் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, சேலம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகவன் செவ்வாய்க்கிழமை வேலூர் சிறைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதம் புதன்கிழமை காலையில் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தது. இதை சிறைக் கண்காணிப்பாளர் சேகர் பெற்றுக் கொண்டார். இதை தூக்குத் தண்டனை கைதிகள் மூவருக்கும் அவர் அளித்தார்.
அதில், "வரும் அக்டோபர் 8ம் தேதி காலை 6 மணிக்கு மூவரையும் சாகும் வரை தூக்கிலிட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வேலூர் மத்திய சிறையில் தூக்கு கடைசியாக எப்போது நிறைவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தூக்குப்போடும் இயந்திரம் மட்டும் தொடர்ந்து தயார் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சேகர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 3 பேரையும் காப்பாற்றும் முயற்சியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார். நேற்று வேலூர் மத்திய சிறைக்குச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மூன்று பேரையும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கருணை மனுவில் மூன்று பேரிடமும் கையெழுத்து பெற்றனர். ஆனால், இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் ஏதும் கூற மறுத்தனர்.
இந்த மனுவுடன் டெல்லி சென்று நேரடியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் அதிமுக எம்.பிக்கள் கருணை மனுவை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, சிறைத்துறை மூலமாகவும் 3 அதிமுகவினரும் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கருணை மனு சமர்ப்பிப்பதைத் தொடர்ந்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் இந்த மனுக்கள் மீது முடிவெடுக்கும் வரை அவர்களுடைய தண்டனை நிறைவேற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications