கேரளாவில் விபரீதம்-வாஷிங் மெஷினுக்குள் போட்டு குழந்தையைக் கொன்ற தாய்
ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழா நகரில், மன நலம் பாதிக்கப்பட்ட பெண் தனது எட்டு மாத குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொலை செய்து விட்டு போலீஸில் சரணடைந்தார்.
ஆலப்புழா அருகே உள்ள சேர்தலாவில் வசித்து வருபவர் சுமா. 40 வயதான இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எட்டு மாதமான ஆண் குழந்தை இறந்தது.
யாருடனும் பேசாமல் வீட்டுக்குள் தனிமையிலேயே இருப்பாராம் சுமா. இந்த நிலையில், டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்த சுமா, தனது மகனை வாஷிங் மெஷினில் போட்டு விட்டதாகவும், குழந்தை இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்து வாஷிங் மெஷினைப் பார்த்தபோது குழந்தையின் உடல் மிதந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உடலை போலீஸார் மீட்டனர். அப்பெண்ணையும் கைது செய்தனர். சுமாவின் கணவர் ஜான். அவர் வேலைக்காக சென்றஇருந்தார். அதேபோல மூத்த மகள் தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில்தான் சுமா இப்படி ஒரு விபரீதத்தை செய்துள்ளார்.