மதானியை சந்திக்க மனைவிக்கு அனுமதி: ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் இருக்கும் மதானியை சந்திக்க அவரது மனைவி சூபியா மதானிக்கு கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கேரளாவில் தமிழக அரசு பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மதானியின் மனைவி சூபியா மதானி நிபந்தனை ஜாமீனில் உள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை சந்திக்க அனுமதி வழங்கக் கோரி சூபியா மதானி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது என்.ஐ.ஏ. சார்பில் ஆஜாரான வழக்கறிஞர், சூபியா மதானியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வாதிட்டார். அதனை நிராகரித்த நீதிமன்றம், பெங்களூர் சென்று மதானியை சந்திக்க சூபியா மதானிக்கு 2 வாரம் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த உத்தரவிட்டது.
மேலும் பெங்களூர் செல்வது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தெரிவித்த பின்னர்தான் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications