கருணாநிதியுடன் தங்கபாலு சந்திப்பு: கூட்டணி தொடரும் என திட்டவட்டம்

முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை தங்கபாலு சந்தித்துப் பேசினார். அவருடன் சட்டசபை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்சும் உடன் சென்றார்
அரை மணி நேர சந்திப்புக்கு பின் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்திக்க வந்தேன். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து செயல்படும். எங்கள் சந்திப்பு அந்த அடிப்படையில்தான் நடந்திருக்கிறது.
கேள்வி: திமுக கூட்டணியை தொண்டர்கள் விரும்பவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கிறாரே?
தங்கபாலு: அன்னை சோனியா காந்தியும் தலைவர் கருணாநிதியும் எடுக்கிற முடிவுதான் இறுதியானது. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே வேறு யாரும் குறுக்கே கருத்துக்களைச் சொல்ல முடியாது. மற்ற விஷயங்களை யார் பேசினாலும் அதைப்பற்றி பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கூட்டத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தெளிவுப்படுத்தியிருக்கிறார். எனவே, காங்கிரஸ்-திமுக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். எங்கள் கூட்டணி 3ல் இரண்டு பங்கு வெற்றியைப் பெறும்.
கேள்வி: இளங்கோவன் பேசி வருவது குறித்து முதல்வர் தங்களிடம் கவலை தெரிவித்தாரா?
தங்கபாலு: அதைப்பற்றி நாங்கள் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமும் எழவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications