பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி தரக் கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்நாட்டில் இருப்பு குறைவாக உள்ளதால் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

தனது கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பருத்தி ஏற்றுமதி தொடர்பாக கடந்த மே மாதம் 19ம் தேதி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்ததை நினைவூட்ட விரும்புகிறேன். அதில், அடுத்த பருத்தி விவசாயம் தொடங்கும் வரை பருத்தி ஏற்றுமதிக்கு தொடர்ந்து தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். பருத்தி விவசாயம் தொடங்கிய பிறகு, உத்தேச விளைச்சலின் இருப்புநிலை மற்றும் உள்நாட்டு தேவைகளை மதிப்பீடு செய்த பின்னர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மத்திய அரசு அடுத்த மாதத்தில் இருந்து பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி கொடுக்க இருப்பதாக பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது நாட்டில் போதிய அளவுக்கு பருத்தி இருப்பு இல்லாத நிலையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது முரண்பாடாக உள்ளது. பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து, கடந்த 3 வாரங்களாக பருத்தி விலை மிக வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஜவுளித்துறை ஏற்றுமதி மூலம் அதிகளவு அன்னிய செலாவணி கிடைப்பதோடு நாட்டில் லட்சக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் கைத்தறி நெசவாளர்களும், உடல் உழைப்புத் தொழிலாளிகளும்தான்.

பருத்தி விலை உயர்வு எதிரொலியாக நூலின் விலையும் உயரும். நூல் விலை உயர்ந்தால் கைத்தறிவு நெசவு கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் முன், உள்நாட்டில் பருத்தி தேவை பூர்த்தி அடைந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

மேலும், சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியாவுக்கு போட்டியாக திகழும் சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்குத்தான் நம் நாட்டில் இருந்து அதிகளவில் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டில் ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான விலையில் பருத்தி கிடைக்காவிட்டால் பருத்தியின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான துணிமணிகள், பனியன்கள், ஆடைகள் ஆகியவற்றின் உற்பத்தி செலவு அதிகமாகும். அதன் காரணமாக சர்வதேச சந்தையில் நம்மால் குறைந்த விலையில் அவற்றை விற்பனை செய்ய இயலாமல் போகும்.

இந்த சூழ்நிலையில், உள்நாட்டு ஜவுளித்துறையினருக்கு நியாயமான விலையில் தரமான பருத்தி கிடைக்கச் செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன்மூலம் துணிமணிகளின் விலையை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, தற்போது உள்நாட்டில் பருத்தி இருப்பு குறைவாக இருப்பதையும், அடுத்த வரவிருக்கும் வாரங்களில் விலை உயர்வு அதிகரிக்க இருப்பதையும் கருத்தில் கொண்டு உள்நாட்டு தேவை பூர்த்தி அடையும் வரை தாங்கள் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+