கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதம்: 3500 பேர் பங்கேற்பு
கரூர்: நூல் விலையேற்றம் மற்றும் பஞ்சு ஏற்றுமதியைக் கண்டித்து கரூர் ஜவுளி கூட்டமைப்பு சார்பில் இன்று 3500 பேர் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் நூல் விலை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மானிய விலையில் நூல் வழங்க வேண்டும் என்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு எந்தவித நடவிடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே, கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளது.
கரூர் ஜவுளி கூட்டமைப்பின் அங்கமான ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம், ஜவுளி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கம், நிட்டிங் வீவிங் தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், சாயப்பட்டறை உரிமையாளர் சங்கம், நூல் வணிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் இன்று கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சங்கங்களி்ன் கூட்டமைப்பு தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில் சுமார் 3500 பேர் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications