தமிழக சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பாளர் நஞ்சப்பன்-தமிழாசிரியர் கழகம் அறிவிப்பு
கரூர்: தமிழக சட்ட மேலவைக்கான தேர்தல் தேதியே இன்னும் தெரியாத நிலையில், தனது வேட்பாளரை அறிவித்துள்ளது தமிழக தமிழாசிரியர் கழகம்.
தமிழக மேலவைக்கான ஆசிரியர் தொகுதிக்கு, தமிழக தமிழாசிரியர் கழக வேட்பாளராக தமிழக தமிழாசிரியர் சங்க சிறப்பு தலைவர் நஞ்சப்பன் களம் இறங்குகிறார்.
இதுகுறித்து நஞ்சப்பன் கூறுகையில்,
தமிழகத்தில் 26 ஆண்டுக்கு பிறகு சட்டசபை மேலவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழக சட்டசபை மேலவையில் இதுவரை தமிழாசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, மேலவை ஆசிரியர் தொகுதியில், தமிழக தமிழாசிரியர் சங்க சிறப்பு தலைவரான என்னை வேட்பாளராக அறிவித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலவை தேர்தல் தொடர்பான உறுப்பினர் கலந்துரையாடல் கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெறும். பிற ஆசிரியர் சங்கங்களிடமும் தமிழாசிரியர் சங்க வேட்பாளரை ஆதரிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழாசிரியர் கழக வேட்பாளரான நான் தேர்வு பெற்றால், அனைத்து ஆசிரியர் உரிமைக்கும் குரல் கொடுப்பேன் என்றார்.