மத்திய அரசின் மெத்தனம்... பிளாக்பெர்ரி 'எஸ்கேப்'!
சென்னை: சின்னதாக ஒரு இடைவெளி கிடைத்தாலும் அதில் விமானமே ஓட்டுவதில் கில்லாடிகள் வெளிநாட்டு நிறுவனங்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
'ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ப்ளாக்பெர்ரி செல்போன்களின் அனைத்து தகவல்களையும் இடைமறித்துக் கேட்கும் வகையில் மாற்றங்கள் செய்தாக வேண்டும், இல்லாவிட்டால் ப்ளாக்பெர்ரிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும்' என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த எச்சரிக்கை விடப்பட்டதாகவும் அறிவித்தது.
ஆனால் ப்ளாக்பெர்ரி தயாரிப்பு நிறுவனமான கனடா நாட்டு ரிசர்ச் இன் மோஷன், தகவல்களை முழுமையாக இடைமறிக்க அனுமதிக்க முடியாது என்றும், குறிப்பிட்ட சில சேவைகளில் மட்டும் அத்தகைய இடைமறிப்புக்கு அனுமதிப்பதாகவும் கூறியது.
இப்போது, இதுகுறித்து ஆராயவும் எந்தெந்த வகையில் ப்ளாக்பெர்ரியின் சேவைகளை இடைமறித்துக் கேட்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி அடுத்த மாதம் கூடி இதுபற்றி விவாதிக்கிறது.
நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் தனது விரிவான அறிக்கையை இந்தக் குழு அளிக்கிறது. அதன் பிறகே, பிளாக்பெர்ரி போன் சர்வீஸ் விஷயத்தில் தனது இறுதி முடிவை மத்திய அரசு தெரிவிக்குமாம்!
எப்படியும் இதற்கு ஒரு ஆண்டுவரை கூட ஆகலாம் என்று கூறப்படுவதால், இப்போதைக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதியில் தடை குறித்த கவலையை கிடப்பில் போட்டுள்ளது பிளாக்பெர்ரி தயாரிப்பு நிறுவனம்!