காமன்வெல்த் மைதானங்களில் தாமதம்-கில், ஜெயபால் ரெட்டியை விளாசிய பிரதமர்
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான மைதானங்கள், கேம்ஸ் வில்லேஜ் உள்ளிட்டவை தயாராவதில் ஏற்பட்டு விட்ட மிகப் பெரிய தாமதம் குறித்து விளையாட்டுஅமைச்சர் எம்.எஸ்.கில், காமன்வெல்த் போட்டிக்கான அமைச்சர்கள் குழுத் தலைவரான ஜெயபால் ரெட்டி ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்து விட்டது காமன்வெல்த் போட்டிக் குழுவின் அசட்டையும், அசமஞ்சமும். அனைத்து ஏற்பாடுகளும் இன்னும் கூட முடியவில்லை. ஊழல், கட்டுமானங்களில் தாமதம், கட்டிய பாலம் இடிந்து விழுந்தது, சுகாதாரமற்ற கேம்ஸ் வில்லேஜ், வேயப்பட்ட மேற்கூரை உதிர்ந்து விழுந்தது என இந்தியாவை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு.
இதையடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (இந்த மூன்று நாடுகளுமே ஓவர் சுத்தம், ஓவர் பாதுகாப்பு குறித்து ரொம்பவே பேசுவது வழக்கம் என்பது தனிக் கதை) ஆகிய நாடுகள் பாதுகாப்பு குறைபாடு உள்ளது, சுத்தம், சுகாதாரம் சுத்தமாக இல்லை என்று குறை கூறி போட்டியில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை மறு பரிசீலனை செய்யப் போவதாக மிரட்டி வந்தன.
இதையடுத்து வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ஆலோசித்தார். அப்போது கில்லுக்கும், ஜெயபால் ரெட்டிக்கும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டு சற்று கடுமையாக பேசினாராம்.
இப்போது பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. விரைவாக செயல்பட வேண்டும் என்று கில்லிடம் பட்டென்று கூறிய பிரதமர், அப்படியே ரெட்டி பக்கம் திரும்பி, போட்டிக்கான மைதானங்கள் தயாராவதில் இவ்வளவு குழப்பம் ஏன் என்றும் கடுமையாக கேட்டாராம்.
அப்போது காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து விளக்க விரும்புவதாக கில் கூறியபோது, தடுத்து நிறுத்திய பிரதமர், இதுகுறித்து இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் நேற்றே (வியாழக்கிழமை தனியாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்) பேசி விட்டீர்களே என்றாராம் சற்று கோபத்தோடு.
ஆனாலும் தொடர்ந்து அதுகுறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க கில் முயன்றபோதும் அதை தடுத்து நிறுத்தி விட்டாராம் பிரதமர். மேலும், ஒரு விளையாட்டு அமைச்சராக மட்டும் செயல்படுங்கள். அதில் சரியாக ஈடுபடுங்கள் என்றும் சற்று கடுமையாகவே விளாசினாராம்.
தொடர்ந்து பிரதமர் கூறுகையில், அத்தனை பேரும் தனித் தனியாகவே செயல்படுகிறீர்கள். உங்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை, ஒருங்கிணைப்பு இல்லை. ஒருவரை ஒருவர் குறை கூறுவதில்தான் காலம் கடத்தி வருகிறீர்கள். ஒரே நாடு, ஒரே விளையாட்டு, ஒரே அரசு என்பதை மறந்து விட்டீர்கள். தற்போது காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. இனியாவது விரைவாக அனைத்தையும் முடிக்க முயலுங்கள் என்றும் எரிச்சலுடன் பேசினாராம்.
வியாழக்கிழமை நடந்த காமன்வெல்த் போட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின்போது கில், ரெட்டி தவிர டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் டோஸ் விட்டிருந்தார் பிரதமர். ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறிப் பேசி இந்தியாவின் பெயரை அசிங்கபப்டுத்தி விடாதீர்கள் என்றும் அவர்களிடம் கடுமையாக கூறினார் பிரதமர்.
அதை விட முக்கியமாக, கல்மாடியை மட்டும் குறை கூறுவது சரியல்ல. போட்டிக் குழப்பத்திற்கும், முறைகேடுகளுக்கும் யாரெல்லாம் காரணமோ அவர்கேள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாரபட்சம் பார்க்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications