காமன்வெல்த் போட்டியிலிருந்து இங்கிலாந்து முன்னாள் டைவிங் சாம்பியன் விலகல்
லண்டன்: காமன்வெல்த் போட்டியிலிருந்து இங்கிலாந்து முன்னாள் நீச்சல் (டைவிங்) சாம்பியன் பீட்டர் வாட்டர்பீல்ட் விலகியுள்ளார்.
அக்டோபர் 3ம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது வீரர், வீராங்கனைகள் விலகல் தொடர் கதையாகியுள்ளது.
லேட்டஸ்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் காமன்வெல்த் நீச்சல் சாம்பியன் வாட்டர்பீல்ட் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. ஆனால் மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். 2006 போட்டியில் வெள்ளி வென்றவர் ஆவார்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார குளறுபடிகள் காரணமாக விலகியுள்ளாராம் வாட்டர்பீல்ட்.
ஏற்கனவே இங்கிலாந்து, கனடா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியிலிருந்து விலகியுள்ளது நினைவிருக்கலாம்.
தனது விலகல் குறித்து வாட்டர்பீல்ட் கூறுகையில், எனக்கு, மனைவி, 2 இளம் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் எனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுகின்றனர். அதை என்னால் புறக்கணிக்க முடியாது என்றார்.
டெல்லி காமன்வெல்த் போட்டியில், 10 மீட்டர் தனிநபர் டைவிங், 10 மீட்டர் பிளாட்பார்ம் சின்க்ரொனைஸ்ட் டைவி்ங் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கவிருந்தார் வாட்டர்பீல்ட்.