அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரும் மனு-தலைமை நீதிபதி தலைமையில் 3 நீதிபதிகள் விசாரிப்பர்
டெல்லி: அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்டுள்ள அப்பீல் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.
அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இதை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த மனுவை முதலில் நீதிபதிகள் கபீர், பாதக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது. பின்னர் இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரவரம்பு இல்லை என்று கூறி அந்த பெஞ்ச் மறுத்து விட்டது.
இதையடுத்து நீதிபதிகள் எச்.எல்.கோகலே, ரவீந்திரன் அடங்கிய பெஞ்சுக்கு மனு விசாரணைக்கு சென்றது. இந்த பெஞ்ச் செப்டம்பர் 28ம் தேதி வரை தீர்ப்பை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. அதேசமயம், இரு நீதிபதிகளும் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அப்பீல் மனு 3வது பெஞ்சுக்குப் போகிறது. செப்டம்பர் 28ம் தேதி விசாரணைக்கு இந்த மனு வரும்போது அதை தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்.
கபாடியா தவிர நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த பெஞ்ச்சில் இடம் பெறுகின்றனர்.
அப்போது அரசு அட்டர்னி ஜெனரல் வாகனாவதி நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் முதல் வழக்காக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.