எல்லா தவறுகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்-சுரேஷ் கல்மாடி
டெல்லி: காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்துக் குளறுபடிகளுக்கும் நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறியுள்ளார் போட்டி அமைப்புக் குழுத் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவருமான சுரேஷ் கல்மாடி.
குழப்பத்திற்கு மேல் குழப்பம் குவிந்தபோதெல்லாம் வாயே திறக்காமல், சப்பைக் கட்டுப் பேச்சை பேசி வந்த சுரேஷ் கல்மாடி, போதும் போதும் என்ற அளவுக்கு நாட்டின் பெயர் கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ள கடைசி நேரத்தில் அனைத்துத் தவறுகளும் தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதை விட முக்கியமாக தவறுகளுக்கு நாங்கள் மட்டும் காரணம், அரசும் கூட தான் காரணம் என்று மத்திய அரசையும், டெல்லி அரசையும் வம்புக்கு இழுத்துள்ளார். உரிய நேரத்தில் அடிப்படைக் கட்டமைப்புக்குத் தேவையானவற்றை அரசுத் துறைகள் தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுவே குழப்பங்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறார் கல்மாடி.
இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டியை நடத்துவது மட்டுமே போட்டி அமைப்புக் குழுவின் வேலை. கட்டுமானப் பணியில் நான் ஈடுபடுவில்லை. அது எனது பொறுப்பும் அல்ல. அதைக் கண்காணிப்பது மட்டுமே எனது வேலை. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில், இந்தக் குழப்பங்களுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால் போட்டி மைதானங்களை தாமதமாகத்தான் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த 2002ல் மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போதும் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்கத்தான் செய்தன. இந்திய அணியினரை ஒரு பல்கலைக்கழகத்தில்தான் தங்க வைத்தனர். எனவே டெல்லி காமன்வெல்த் போட்டியை ஒட்டுமொத்தமாக குறை கூறுவது சரியல்ல.
கேம்ஸ் வில்லேஜ் சிறப்பாக உள்ளது. உலகத் தரத்தில் அமைந்துள்ளன. மெல்போர்னில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்கும் உள்ளன என்றார் கல்மாடி.