எனது ஆட்சியில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகை பாக்கி வைத்ததே இல்லை-ஜெ.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜவுளித் தொழில் உற்பத்தி சீரழிவதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் தான். நூல் விலையேற்றம் இதற்கு மற்றுமொரு காரணம். இதனால், ஆண்டுக்கு ஒருமுறை ஜவுளி ரகங்களுக்கு விலை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்துள்ள ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக கரூர் மாவட்டத்தில் ஜவளி ஏற்றுமதி 2,300 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் பஞ்சு, கழிவு பஞ்சு, நூல் ஏற்றுமதி கொள்கை முடிவு காரணமாக, ஜவுளி உற்பத்திக்குத் தேவையான பருத்தி, கழிவு பஞ்சு போன்ற மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஜவுளி ஏற்றுமதிக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த 8.2 விழுக்காடு வரிச்சலுகையை 7.1 சதவீதமாக மத்திய அரசு குறைந்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
எனது ஆட்சிக்காலத்தில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மாதா மாதம் வழங்கப்பட்டு வந்த நிலுவைத் தொகை தற்போதைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆறுமாத காலமாகியும் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதோடு, அவர்களுக்கு நிதி இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
தி.மு.க. அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், சலவை மற்றும் சாயத் தொழிலாளர்கள், தையற் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளித் தொழிலில் நிலவும் தேக்க நிலைமை குறித்து ஆட்சியாளர்களிடம் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
கடுமையான மின்வெட்டு, நூல் விலை உயர்வு, தவறான ஏற்றுமதி கொள்கை ஆகிய வற்றின் மூலம் ஜவுளித் தொழிலை முடங்க வைத்து, தொழிலாளர்களை பாதிப் புக்கு உள்ளாக்கிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், ஜவுளி உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை யினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், கரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 28 ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10.00 மணி அளவில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர். தம்பிதுரை எம்.பி. தலைமையிலும், கரூர் மாவட்டக் கழக செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications