மூட நம்பிக்கை: பெரிய கோவில் மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று தஞ்சை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் பெரிய கோவிலுக்குள் மெயின் கேட் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.
இதற்குக் காரணம், பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. மெயின் கேட் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். மெயின் கேட் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சரியாக மீளாமலேயே உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.
ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகரான முதல்வர் மெயின் கேட் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் வந்தார்.
பின்னர் கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை முதல்வர் கண்டு களித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக நந்தி மண்டபத்தை சுற்றி பச்சை மற்றும் சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. மாலை 5 மணிக்கு திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. திருக்குவளை சகோதரிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பொன்னடை அணிவித்து கவுரவித்தார். அதன்பின்னர் பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார்கள் திருமுறைகள் ஓதினார்கள்.
அதைத் தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலில் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் 1000 கலைஞர்கள் ஆடிய பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
பட்டுச் சட்டை, வேட்டியில் கம்பீரமாக காட்சி அளித்த முதல்வர், வழக்கமாக அணியும் மஞ்சள் துண்டுக்குப் பதில் பட்டு அங்கவஸ்திரத்துடன் காணப்பட்டார்.
ஆதி சங்கரர் இயற்றிய சிவப்பஞ்சாட்சர ஸ்ருதி, திருஇசைப்பாவிலிருந்து சில பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்கள் இதில் இடம் பெற்றன.
முதல்வர் அங்கிருந்த ஓதுவார்களிடம் பெரிய கோவிலைப் புகழ்ந்து சில பாடல்களைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அருணகிரிநாதர் பாடல்கள் சிலவற்றைப் பாடி முதல்வரை மகிழ்வித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,
மாமன்னன் ராஜராஜனுடைய 1000 ஆண்டு விழாவை, அவன் கட்டிய அற்புதக் கோவிலின் பின்னணியை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக, நம்முடைய முனைவர் பத்மா சுப்பிரமணியம் குழுவினர், குழுவினர் என்றால் பொருந்தாது, சேனையுடன், ஒரு சேனையில் எவ்வளவுபேர் இருப்பார்களோ அதைப்போல 1000 நடனக் கலைஞர்களை திரட்டி வந்து எல்லோரும் மகிழும் வகையில் நடனமாடியிருக்கிறார்.
நடனத்தில், நடன கலைஞர்களின் கலைநயம், ஆர்வம், நம்பிக்கை, பற்று ஆகியவற்றை காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியை 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் ஆன்றோர், சான்றோர், விஞ்ஞானிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வியந்து போயிருக்கிறார்கள்.
1000 ஆண்டு விழாவையொட்டி 1000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்போவதாக பத்மா சுப்பிரமணியம் என்னிடம் சொன்னபோது, நீங்கள் சிரமப்பட வேண்டாம், உங்களுடன் அரசும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தயாராக இருக்கிறது என்று சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்டு நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.
பாடல், இசையுடன் 1000 பேருக்கு ஒத்திகை கொடுக்க வேண்டுமே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறுகையில், பாடல், இசை, நடனத்துடன்கூடிய சி.டி.யை ஆயிரம் பேருக்கும் அனுப்பப் போகிறேன். அவர்கள் அதனைப் பார்த்து ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
அவர் சி.டி.யைப் போட்டாரோ என்னவோ தெரியவில்லை. நான் சி.ஐ.டி.யைப் போட்டு விசாரிக்க சொன்னேன். அப்போது நடன நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு நடக்கிறது என்று தெரியவந்தது. அதன்படி, இந்த நடன நிகழ்ச்சி சிறப்பாக, வெற்றிகரமாக நடந்துள்ளது. நடனத்தின் மூலம் நம்மை மகிழ்வித்த பத்மா சுப்பிரமணியம் குழுவினருக்கு உங்கள் சார்பில் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் கனிமொழி, அமைச்சர்கள் ராஜா, பழனிமாணிக்கம், பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications