பெரிய கோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா-கருணாநிதி இன்று உரை
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலை முதல்வர் கருணாநிதி நிறைவு பேருரை ஆற்றுகிறார்.
தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கொண்டாட்டங்கள் கடந்த 22-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கி இன்று முடிகிறது. இதையொட்டி தஞ்சையில் தினமும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
கொண்டாட்டத்தின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு பெரிய கோவில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினர் வழங்கும் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு விழா மாலை 5 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சை பெரியகோவில் வடிவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் நடக்கிறது.
இதில் முதல்வர் கருணாநிதி நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார்.
நிகழ்ச்சியில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணயத்தை மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் வெளியிடுகிறார். இதை மத்திய அமைச்சர் நாராயணசாமி பெற்றுக்கொள்கிறார்.
இது தவிர தஞ்சை பெரியகோவில், ராஜராஜசோழன் புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது. இந்த தபால் தலையை மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியிடுகிறார். இதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications