மணலி தொழிற்சாலையில் குளோரின் கசிவு : 7 பேர் மயக்கம், பலருக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல்
திருவொற்றியுர்: மணலியில் உள்ள பெட்ரோ தொழிற்சாலையில் திடீர் என்று குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதில் 7 பேர் மயக்கம் அடைந்தனர், பலர் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர்.
சென்னையை அடுத்த மணலியில் தமிழ்நாடு பெட்ரோ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மருத்துவத்திற்குத் தேவைப்படும் மருந்து வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென்று குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. குளோரின் வாயு செல்வதற்காக இருந்த பிரத்யேக குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. ஆனால் தொழிற்சாலை தீ அணைப்பு படையினர் மற்றும் எண்ணூர் தீ அணைப்பு படையினர் முயற்சியால் தீ உடனே அணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாயு கசிவும் கட்டுப்படுத்தப்பட்டது.
காற்று மண்டலத்தில் கலந்த குளோரின் வாயுவை சுவாசித்த ஆசிப் (21), அசன் உசேன் (28), அன்வர் பாட்சா (28), ரிஸ்வான் (24), ரிஸ்வான் செரீப் (27), பிரபாகரன் (27), சஞ்சிவ் காந்தி (31) ஆகிய 7 பேர் மயக்கம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த வழியாகச் சென்றவர்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் மணலி-பொன்னேரி இணைப்பு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இது குறித்து மணலி சாத்தங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications