மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து விட்டதா சிபிஐ?-சுப்ரீம் கோர்ட் கேள்வி
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக மாயாவதி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. கடந்த 2003ம் ஆண்டு ரூ. 1 கோடியாக இருந்த சொத்து 2007ல் 50 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார் மாயாவதி. இந்தப் பணம் தனக்கு நன்கொடையாக வந்த பணம் என்று விளக்கம் அளித்தார் மாயாவதி. ஆனால் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக கூறி அவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த வழக்கு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மகா மகா மந்தமாக அது நடந்து வருகிறது.
முதலில் மாயாவதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்று வருமான வரித்துறையினர் கூறியுள்ளதாக சிபிஐ கூறியிருந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பி்ல் அளித்த பதிலில், மாயாவதியை விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தது சிபிஐ.
ஆனால் மாயாவதிக்கு சாதகமாக சிபிஐ நடந்து வருகிறது. மேலும், தனது அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐயை காங்கிரஸ் ஆட்டி வைத்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு அவர்கள் உதாரணமாக கூறுவது, மத்திய அரசுக்கு எதிராக முக்கியமான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வந்தபோது மாயாவதி நடுநிலை வகித்தார். இதற்குப் பிரதியுபகாரமாகவே மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்துமாறு சிபிஐக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது மாயாவதியுன் கூட்டு சேர்ந்து சிபிஐ செயல்படுகிறதா என்று நீதிபதிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.