தமிழகத்தில் ஆட்டோ கட்டண நிர்ணம்-போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை அரசே நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஆட்டோவில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். அதற்கு காரணம் தாறுமாறாக இருக்கும் ஆட்டோ கட்டணம். இந்நிலையில் ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் இமானுவேல் பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள மனுவில கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால் ஒரு ஆட்டோவில் கூட மீட்டர் என்பதே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர். வெறும் 1 கி. மீ. செல்ல வேண்டுமென்றாலும் குறைந்தது ரூ. 50 கொடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் வைத்ததே சட்டமாக உள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக மீட்டர் பொருத்தப்பட வேண்டும். மேலும், குறைந்த பட்சக் கட்டணம், தூரத்திற்கேற்ப கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இது குறித்து இன்னும் 3 வாரத்திற்குள் பதில் அளிக்க போக்குவரத்து துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.