அயோத்தி தீர்ப்பு.. 'திக் திக்' நிலையில் இருந்த தேசம்!

60 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.
ஏற்கனவே மசூதி இடிப்பின்போது ஏராளமான உயிர்ப் பலிகளை நாடு சந்தித்துவிட்டதால் இம்முறை நாடு முழுவதும் பீதி நிலவுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்புக்குப் பின் வன்முறை ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளும், இந்து முஸ்லிம் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று மாநில அரசுகளை மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. மேலும் எங்கெங்கு பிரச்சனை ஏற்படும் என்ற மத்திய உளவுப் பிரிவின் எச்சரிக்கையையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த இடங்களுக்கு மத்தியப் படைகளும் அனுப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வன்முறைக்கு அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கேரளத்தில் கன்னூர் உள்ளிட்ட மாவட்டங்களி்ல் மத்திய அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ஓசூர், மதுரையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரும்பாலான மாநிலங்களில் போலீஸ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மும்பையில் போலீசார் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
குஜராத், கோவா, ராஜஸ்தான், டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 16 இடங்களில் மத்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.
எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக அந்தப் படையினர் சம்பவ இடததை அடைய விமானப் படைக்குச் சொந்தமான ஐ.எல்.-76 மற்றும் ஏ.என்.-32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதுமே மதுக் கடைகள், பட்டாசு கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications