டிஜிட்டல் பேனர்களை கட்டுப்படுத்த சட்டத் திருத்தம்-தமிழக அரசு முடிவு
சென்னை: பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்களை வைப்பது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் சட்டத் திருத்தத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் டிஜிட்டல் பேனர் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் டி.முருகேசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி இந்த டிஜிட்டல் பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள சில முடிவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் தொடர்ந்து டிஜிட்டல் பேனர்களை அமைப்பது, அதை அதிகாரிகள் அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் சரிவர இல்லை என்றும் இது தொடரும் பிரச்சனையாக உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் விளம்பரப் பலகைகளின் தற்போதைய நிலை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை நகராட்சி சட்டத்தின் கீழ் இவை வருகின்றன. விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து தடையற்ற சான்றிதழ் பெறப்படுவது அவசியம். இந்த விவகாரத்தில் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதியை சரிவர நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த டிஜிட்டல் பேனர்களை எத்தனை நாட்கள் வைக்க வேண்டும் என்பதற்கு தகுந்த விதிகளோ, உத்தரவோ இல்லை.
ஒரு விழா நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பும், விழா நடந்த பிறகு 2 நாட்களும் டிஜிட்டல் பேனர்களை வைத்திருக்கலாம் என்று முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பைத் தவிர வேறு எந்த உத்தரவும் இதுவரை இதற்கென்று இல்லை.
வைக்கப்படும் பெரும்பாலான பேனர்கள், அரசியல், மதம் மற்றும் சமூக விழாக்களுக்கானவை.
டிஜிட்டல் பேனர்கள் தற்காலிகமானவை என்பதால், சென்னை நகர நகராட்சி சட்டத்திலும், உள்ளாட்சி சட்டத்திலும், டிஜிட்டல் பேனர்களை நிர்வகிக்கும் சிறப்புச் சட்டம்' என்ற பிரிவை அறிமுகம் செய்வது அவசியமாகிறது. மேலும், பேனர்களை நிறுவுவது, அவற்றை அகற்றுவது ஆகியவற்றுக்கென்று தொகுப்பு விதிமுறைகளை வடிவமைக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
விளம்பரப் பலகை' என்பதன் விளக்கத்தை, உள்ளாட்சி சட்டம் மற்றும் விதிமுறைகளில் மாற்றி, அதிலிருந்து, டிஜிட்டல் பேனர்' என்ற பெயரை நீக்குவதற்கான திருத்தத்தை கொண்டு வருவதும் அவசியம்.
இதற்காக வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்யலாம். டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி பெறுவதற்கான முறைகளை மிகவும் எளிமைப்படுத்தப்படும். ஒரே அமைப்பு மூலம் இந்த அனுமதியை வழங்கலாம்.
டிஜிட்டல் பேனர்கள் அனைத்தும் அதிகபட்சம் 5 நாட்கள் மட்டும் நிறுத்தி வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.