குமரி விநாயகர் சிலை ஊர்வல வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 15 லட்சம் நிவாரணம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 15 லட்சத்து 68 ஆயிரம் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மிடாலம் என்ற இடத்தில் 19.9.2010 அன்று நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது உள்ளூர் மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீடுகள் மற்றும் கடைகள், வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டியது அவசியம் என்று மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதனை ஏற்று பாதிக்கப்பட்ட 8 வீடுகள், 3 கடைகளுடன் கூடிய வீடுகள் 21 கடைகள் மற்றும் 5 வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 15 லட்சத்து 68 ஆயிரத்து 800 நிவாரண உதவி வழங்க இன்று முதல்வர் ஆணையிட்டு உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.