சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் அதிமுக கூட்டணியில் சேரும் பாமக?
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக சேர்ந்து போட்டியிட்டது. 30 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது.
அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமத்ஸ். ஆனால், போட்டியிட்ட 7 இடங்களிலும் பாமக படுதோல்வியை சந்தித்தது.
இதையடு்த்து அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது.
இதன் பின்னர் மாநிலங்களவை தேர்தலில் அன்புமணிக்கு ஒரு எம்பி சீட்டைப் பெறுவதற்காக திமுகவுடன் பாமக நெருங்கியது. இதற்காக தமிழகத்தில் மேலவை அமைப்பதற்காக திமுக கொண்டு வந்த தீர்மானத்தை பாமக ஆதரித்தது.
ஆனால், பாமகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட்டை தர திமுக மறுத்துவிட்டது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை 18 பாமக எம்எல்ஏக்களும், கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும் பலமுறை சந்தித்துப் பேசியும் பலன் ஏற்படவில்லை.
இதனால் திமுகவை விமர்சிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால், திமுக கூட்டணியில் பாமக சேரலாம், ஆனால், 2013ம் ஆண்டு நடக்கும் ராஜ்பயசா தேர்தலில் வேண்டுமானால் ஒரு சீட் தருகிறோம் என்று திமுக கூறிவிட்டது.
இதையடுத்து மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் ராமதாஸ்,
இந் நிலையில் பென்னாகரம் இடைத் தேர்தலிலில் பாமக தனித்து போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்தது. அங்கு திமுக வென்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இதையடுத்து யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டியிடவும் தயார், காங்கிரசுடன் தனி கூட்டணி அமைப்போம், விஜய்காந்துடன் கூட்டணி சேரவும் தயார் என்று தினந்தோறும் ஒரு கருத்தை கூறி வருகிறார் ராமதாஸ்.
ஆனால், அவரது கருத்துக்கு காங்கிரசோ அல்லது விஜய்காந்தோ எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்க ராமதாஸ் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவி்ல்லை.
இந் நிலையில், மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக முயற்சி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து சிலர் பாமகவுடன் பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரசுடன் கூட்டணி வரும் என்று கூறி வந்த அதிமுகவுக்கும் அந்தக் கட்சியில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிமுகவும் கூட்டணியை வலுப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறது.