For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோடு: காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட கார்-தாய், 2 குழந்தைகள் பலி

Google Oneindia Tamil News

ஈரோடு & சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் உள்ள முக்கிய அணையான பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது.

கடம்பூர் மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து, அங்கிருந்து வரும் வெள்ள நீர் காட்டாற்று வெள்ளமாக அத்தானி செல்லும் நெடுஞ்சாலையில் பாய்ந்தது.

இந்த சாலை நீரில் மூழ்கிய நிலையில், டி.ஜி.புதூர் கிராமத்தில் நால்ரோடு பகுதியில் தரைப் பாலத்தை கடக்க முயன்ற ஒரு அம்பாஸிடர் காரை வெள்ளம் இழுத்து சென்றது.

அந்தக் காரில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி செந்தில் வடிவு, மகள் விஷ்ணுபிரியா (12), மகன் ஆதித்ய பாலாஜி (10) ஆகியோர் வந்தனர்.

கோவையில் இருந்து நேற்றிரவு இவர்கள் வந்த கார் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது வெள்ள நீர் காரில் புகுந்து என்ஜின் நின்றுபோனது. இதையடுத்து காரை வெள்ளம் இழுத்துச் சென்றது.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி தப்ப முயன்ற இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் செந்தில்வடிவு, விஷ்ணுபிரியா, ஆதித்ய பாலாஜி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விவரம் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து மூவரின் உடல்களையும் கொடிவேரி அணைக்கு செல்லும் கால்வாயில் இருந்து மீட்டனர்.

ஓரிரு நாட்களில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும்:

இந் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் மாத மத்தியில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டும் உரிய காலத்தில் மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேக சுழற்சி காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஒரு சில உள்மாவட்டங்களிலும், புதுச்சேரியில் அனேக இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்னும் ஒரு சில நாட்களில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதற்கு அச்சாரமாகத்தான், வளிமண்டலத்தில் இப்போது மேக சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது என்றார்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக விருதுநகர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ஈரோடு உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது.

ஐந்தருவியில் வெள்ளம்:

இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை 3 மணி முதல் பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர்கள் நீரில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.

மேலும் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பியது. ஐந்தருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X