ரயில்வே ஊழியர்களுக்கு 77 நாள் சம்பளம் போனஸ்
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 77 நாள் சம்பளம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தி்ல், இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த 77 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் 12.92 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவர். இதனால் அரசுக்கு ரூ. 1,066 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்த பல்வேறு மாநிலங்களில் புதிதாக 13 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த 3 மாநில பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.3,000 கோடி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அத்தோடு இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளில் 10 சதவீதத்தை தனியாருக்கு விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1,300 கோடி திரட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.