கேரள லாட்டரி அதிபருக்கு ஆதரவாக வாதிட்ட விவகாரம்-சிங்விக்கு காங். ஆப்பு
டெல்லி: கேரளாவில் நடந்து வரும் லாட்டரி சீட்டு தொடர்பான வழக்கில் லாட்டரி அதிபர் சான்டியானோ மார்ட்டினுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகி வாதிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியை அப்பொறுப்பிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது. கேரள காங்கிரஸாரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அது எடுத்துள்ளது.
கேரள லாட்டரி வழக்கில் லாட்டரிச் சீட்டு அதிபர்களுடன் இடதுசாரி அரசு கை கோர்த்து செயல்படுவதாக காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது. இந்த நிலையில் மார்ட்டினுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார் சிங்வி. இதனால் கேரள காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. மார்ட்டினுக்கு ஆதரவாக சிங்வி ஆஜரானதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெட்டு விட்டதாக மேலிடத்தில் புலம்பினர் கேரள காங்கிரஸ் தலைவர்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவரே, அதுவும் செய்தித் தொடர்பாளராக உள்ள ஒருவர் இடதுசாரி அரசுடன் கூட்டு வைத்துள்ள மார்ட்டினுக்கு ஆதரவாக வாதாடியதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் மேலிடத்தில்முறையிட்டனர்.
இதையடுத்து செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சிங்வியை கட்சி மேலிடம் நீக்கியுள்ளது. இப்போதைக்கு சிங்வி, செய்தித் தொடர்பாளராக செயல்பட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ட்டினுக்கு ஆதரவாக கொச்சியில் கடந்த வாரம் வழக்கில் வக்கீலாக ஆஜரானார் சிங்வி என்பதுகுறிப்பிடத்தக்கது.