ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க திருப்போரூர் ஆதீனத்தை கடத்த முயன்ற கும்பல்
திருப்போரூர்: திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பல் கோவிலின் ஆதீனத்தை காரில் கடத்த முயன்றது. பொதுமக்கள் திரண்டதால் அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
திருப்போரூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாக 91 வயதான ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் உள்ளார்.
இந்த கோவிலுக்கு திருப்போரூர் மற்றும் சென்னை பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் 18.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.60 கோடி ஆகும்.
''இந்த நிலத்தை விற்று பணத்தை பாங்கியில் டெபாசிட் செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணம் மூலம் கோவிலை நிர்வகிக்க ஆதினம் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்'' என்றும் கடந்த வாரம் பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியானது.
ஆனால், இந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை என்று ஆதீனமும் கோவில் நிர்வாகிகளும் கூறிவிட்டனர். இதனால் நிலத்தை ஏதோ ஒரு கும்பல் சுருட்ட முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சிவஞான சுவாமிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க திட்டமிட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த மடத்துக்கு காரில் வந்த ஒரு கும்பல் ஆதீனத்தை கடத்திச் செல்ல முயன்றது.
இதைப் பார்த்த கோவில் ஊழியர்கள் அந்தக் கும்பலைத் தடுத்தனர். தகவல் அறிந்து ஊர் மக்களும் அங்கு விரைந்து வரவே அந்த மர்மக் கும்பல் தப்பிவிட்டது.
ரூ.60 கோடி சொத்தை அபகரிக்க முயன்ற கும்பல் தான் ஆதீனத்தை கடத்த முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆதீனம் தங்கியுள்ள மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.