ராமதாஸைப் பார்க்க ரயிலுக்குள் ஏற விடாமல் தடுத்த டிடிஆரைத் தாக்கிய பாமகவினர்
கரூர்: மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை பார்ப்பதற்காக திமுதிமுவென ரயில் பெட்டிக்குள் ஏறினர் பாமகவினர். அவர்களை ஏறக்கூடாது என்று டிடிஆர் தடுத்ததால் ஆவேசமடைந்து அவரை போட்டுத் தாக்கி காயப்படுத்தி விட்டனர்.
விதிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் சாதாரண ஜனங்களுக்குத்தான், அரசியல்வாதிகளுக்கு அது வெறும் கோவணம் போல, தேவைப்பட்டால் கடைப்பிடிப்பார்கள், இல்லாவிட்டால் தூக்கிப் போட்டு விடுவார்கள். இதை அவ்வப்போது அரசியல் கட்சியினர் நிரூபித்து வருகின்றனர். அந்தவகையில் கரூரில் ஒரு ரயில்வே டிடிஆரை போட்டு சரமாரியாக தாக்கி நையப்புடைத்துள்ளனர் பாமகவைச் சேர்நதவர்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் கவுண்டம்பாளைய புதூரில் நடைபெற்றது. இதில் ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் பவானியில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் திண்டுக்கல் புறப்பட்டார்.
ராமதாஸ் மங்களூர் எக்ஸ்பிரசில் வருவதை அறிந்த கரூர் பாமக நிர்வாகிகள், அவரை பார்க்க திட்டமிட்டனர். அதன்படி கரூர் பாமக மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் பாமக நிர்வாகிகள், கரூர் ரயில்வே நிலையத்தில் காத்திருந்தனர்.
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வந்தடைந்ததும், பாமகவினர் ரயில் பெட்டியில் ஏற முயன்றனர். அப்போது ஏசி கோச் டி.டி.ஆர். சுரேஷ்சன் மீனா, எதற்காக ஏறுகின்றீர்கள் என்று கேட்டுள்ளார். ராமதாசை பார்க்க வேண்டும் என்று சொன்னதால், ஒருவரை மட்டும் அனுமதிப்பதாக சுரேஷ்சன் மீனா கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பாமக நிர்வாகி ஒருவர், டி.டி.ஆரை இழுத்துப் பிடித்து சரமாரியாக தாக்கினார். அதைப் பார்த்த ரயில்வே போலீஸார் விரைந்து வந்து அந்த பாமக நபரை வளைத்துப் பிடித்துக் கொண்டனர்.
இதையடுத்து சுற்றியிருந்த பாமகவினர் போலீஸாரிடமிருந்து அந்த பாமக நபரை மீட்டு தப்பி ஓட வைத்து விட்டனர். அதன் பின்னர்கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.
திருச்சிக்கு ரயில் வந்ததும், தன்னை பாமகவினர் தாக்கியது குறித்து டிடிஆர் மீனா புகார் கொடுத்தார்.
பாமகவினரின் இந்த வெறிச்செயலால் ரயில்வே ஊழியர்கள் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications