அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பணிகிறார்கள்-தப்புகிறது கர்நாடக பாஜக அரசு
எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 20 எம்.எல்.ஏக்களில் கணிசமான பேர் சமாதானமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தற்போது ஊர் ஊராகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து மும்பை போனார்கள். தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து பெங்களூர் திரும்புவதாக தற்போது கட்சி மேலிடத்திற்குத்தகவல் அனுப்பியுள்ளனர்.
மேலும், எதியூரப்பா தங்களது தலைவர் என்றும், அவரது ஆட்சி கவிழ அனுமதிக்க மாட்டோம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தாங்கள் அவசியம் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து எதியூரப்பாவே கூறுகையில், எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்.தானும், பிற எம்.எல்.ஏக்களும் பெங்களூர் திரும்புவதாக அவர் கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எனது அரசு வெற்றி பெறும் என்று நான் உறுதியாகநம்புகிறேன் என்றார்.
போர்க்கொடி உயர்த்திய எம்.எல்.ஏக்களில் கணிசமான பேர் சமாதானத்திற்கு முன்வந்திருப்பதால் அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கி விடும் என்ற நம்பிக்கைக்கு பாஜக வந்துள்ளது.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் பிரச்சினைக்குக் காரணம் என பாஜகதரப்பு கடுமையாக குற்றம் சாட்டுகிறது. குமாரசாமியும், காங்கிரஸும் சேர்ந்துதான் எம்.எல்.ஏக்களை போர்க்கொடி உயர்த்துமாறு தூண்டி விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
குமாரசாமியுடன் சேர்ந்து பாஜகவில் குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸும் தீவிரமாக முயன்றது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக மாறப் போவதாக தகவல்கள் கிடைத்ததால், பயந்து போய் தனது கட்சியின் 50 முக்கிய எம்.எல்.ஏக்களை பெங்களூருக்கு அருகே தொட்டப்பல்லபூரில் போய் ரிசார்ட்டில் அடைத்து வைத்து விட்டது காங்கிரஸ். இன்னும் அவர்கள் பெங்களூர் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.