தடை நீக்கம்-ஆந்திராவுக்கு 200 லாரிகளில் பட்டாசுகள் சென்றன
சிவகாசியில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 8 அதிகாரிகள் பலியானார்கள். இதை தொடர்ந்து தொழிற்சாலை ஆய்வக துறை நடத்திய அதிரடி சோதனைகளில் 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக அக் 14ம் தேதி வரை டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பட்டாசு இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல, ஆந்திராவில் தாடே பள்ளி கூடம் என்னுமிடத்தில் அனுமதியில்லாமல் ஒரு வீடடில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர்.
இதேபோல் தனுக் என்னுமிடத்தில் வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து 4 பேர் பலியாகினர். அங்கிருந்த மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருந்த தனுக் போலீஸ் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் போலீ்ஸ் நிலையம் தரைமட்டமானது. இதனால் பட்டாசுகளை இருப்பு வைக்க ஆந்திராவிலும் தடை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆந்திராவில் அந்தந்த மாவட்ட நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் பட்டாசு விற்பனைக்கான தடையை நீதிமன்றம் நீங்கியது. மேலும் ஆந்திரா மாநில அரசும் விபத்தின்றி பட்டாசு விற்பனையை நடத்துமாறு அனுமதி வழங்கியது.
அதனால் நேற்று முன்தினம் பட்டாசுகளை ஏற்றிய 200க்கும் மேற்பட்ட லாரிகள் சிவகாசியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு புறப்பட்டன. மேலும் 100 லாரி பட்டாசுகளை வியாபாரிகள் சேகரித்து வருகின்றனர். அதனால் சிவகாசியில் தற்போது பட்டாசுகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.