கேரள அருவியில் விழுந்து சென்னை இன்போசிஸ் என்ஜினியர் பலி
திருவனந்தபுரம்: கேரளத்தில் அருவியில் விழுந்து சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் பலியானார்.
சென்னை முகப்பேர் கோல்டன் காலனியை சேர்ந்த விஜயகுமார் இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகாவின் தாயார் டாக்டர் இந்திராணி.
இவர்கள் அனைவரும் தங்களது உறவினர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தனர்.
ரயில் மூலம் கோழிக்கோடு வந்த அவர்கள் அங்கிருந்து ஒரு வேன் மூலம் வயநாடு காந்தன்பாறை நீர்வீழ்ச்சியை காணச் சென்றனர். அருவியில் குளித்தபோது இந்திராணி வழுக்கி அருவியில் விழுந்தார். அவரை காப்பாற்ற விஜயகுமாரும், கிருத்தாவும் முயன்றனர்.
அப்போது எதிர்பாரவிதமாக விஜயகுமார் 100 அடி பள்ளத்தில் உள்ள தடாகத்தில் விழுந்தார். அங்கிருந்த சுற்றுலா பயணிகள் இந்திராணியையும், கிருத்திகாவையும் காப்பாற்றினர். தொடர்ந்து விஜயகுமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து கல்பெட்டா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் தேடி விஜயகுமார் உடலை மீட்டனர்.