சோனியா கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஈவிகேஎஸ்!!
திருச்சி: சோனியா காந்தி பங்கேற்ற திருச்சி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேசக் கூட வாய்ப்பு தராததால் அவரது ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இப்படியெல்லாம் நடக்கும்போது, பொதுவாக பழியை இன்னொரு கோஷ்டிமீது போட்டே பழக்கமான காங்கிரஸார் இந்த முறை, அந்த கோஷ்டியோடு திமுகவையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். திமுகவினரின் வற்புறுத்தலால்தான் இளங்கோவனுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று புலம்புகின்றனர்.
'ஆட்சியில் காங்கிரசுக்கும் பங்கு, இல்லையேல் கூட்டணியில் மாற்றம்' என்று ஆக்ரோஷமாகப் பேசி வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திமுக அரசை விமர்சிப்பதில் அதிமுகவுக்கு இணையாகத் திகழ்கிறார் என்று காங்கிரஸ்காரர்களே கூறுமளவுக்கு அவர் இந்த விஷயத்தில் வேகம் காட்டி வருகிறார்.
இதற்கு, காங்கிரஸ் தொண்டர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இளங்கோவனின் பேச்சை மாநிலத் தலைவர் தங்கபாலு உட்பட எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற, கட்சியின் 125ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் கடந்த சனியன்று திருச்சியில் நடந்தது. பல சர்ச்சையை கடந்து திட்டமிட்டபடி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணத்துக்காக, 6 பேர் மட்டுமே உட்காருவது போல மேடை அமைக்கப்பட்டது. மேடையில், சோனியாவுடன் இடம் பெற்ற மத்தியமைச்சர்கள் சிதம்பரம், வாசன், மாநிலத் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு மட்டும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், மேடையில் இடம் கிடைத்தும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளங்கோவனுக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த கோஷ்டியையும் சேராத, ஆனால் திமுக கூட்டணியை விரும்பாத காங்கிரஸாருக்கும் இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
திமுகவுக்கு எதிரான கருத்துக்களை நிச்சயம் இந்தக் கூட்டத்தில் இளங்கோவன் பேசுவார் என்பதை எதிர்ப்பார்த்தே, அவரை திட்டமிட்டு பேசவிடாமல் செய்துவிட்டனர் என்று குமுறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதே நேரத்தில் இளங்கோவனின் மனதைப் பிரதிபலிப்பது போல, ஆட்சியில் பங்கு, கூட்டணியில் முக்கியத்துவம் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதில் இளங்கோவன் கோஷ்டிக்கும் சற்று திருப்தியாம்!.